எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்காமல் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவானதொரு தலைவராகச் செயற்படுவது குறித்துத் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெறுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கபண்டார தெரிவித்தார்.
பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வெளியே செயல்படும் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு ஆசனமும் எடுக்க முடியாமல் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது.
ஆனாலும் இலங்கைத் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாகக் கட்சி இலங்கைத் தீவு முழுவதிலும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைவாகத் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியது.
அந்த ஆசனத்துக்கே ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சியின் மத்திய குழு பரிந்துரை செய்திருந்தது. அதனால் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றிருந்தார்.