இந்தத் தோல்வி மன நிலையால், இலங்கைத் தீவில் இனிமேல் யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களுடன் பேரம் பேசித் தங்கள் புவிசார் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நோக்கங்களை நிறைவேற்றுவது என்பதை மாத்திரமு நோக்கமாகக் கொண்டு இந்த நாடுகள் செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறானவொரு சூழலில் சஜித் பிரேமதாசாவும் மைத்திரிபால சிறிசேனவும் ஆட்சி மாற்றம் பற்றிப் பேசியதாக இலங்கைப் புலனாய்வுத்துறை அதுவும் கோட்டாபய ராஜபக்சவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றது.
ஆனால் சஜித் பிரேமதாசவை மைத்திரிபால சிறிசேன சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
இந்தப் புலனாய்வு அறிக்கை பொய்யானதென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் இருந்து அகற்றும் நோக்கில் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதேவேளை, இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன எதுவுமே கூறவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பணிப்போர் இடம்பெறுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் கடுமையாக முரண்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களும் தனித்துச் செயற்படுவது தொடர்பாக கட்சியின் மூத்த உறுப்பினர்களோ மைத்திரிபால சிறிசேன உரையாடி வருவதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் பலமான கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெறுவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.