நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவில் கொரோனா தொற்றால் கடந்த இரண்டு நாட்களில் 315 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை 160 பேரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 155 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கொவிட் நோய்ப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொது முடக்கம் அல்லது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை மருத்துவர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதாரச் சேவைகள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் சந்தித்துப் பேசியிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
ஆனால் ஊரடங்குச் சட்டம் அல்லது பொது முடக்கத்தை அறிவிக்க முடியாதெனவும் மக்கள் பாதுகாப்பான முறையில் இருப்பதற்குரிய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டமைக்கான மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மாத்திரமே வெளியில் நடமாட முடியுமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரை ஐயாயிரத்து தொள்ளாயிரத்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென சுகாதார சேவைகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.