இலங்கைத்தீவில் வேகமாகப் பரவும் கொவிட்

திங்கட்கிழமை முதல் இரவுநேர ஊரடங்குச் சட்டம் அமுல்

அனைத்துக் கட்சிக் கூட்டதைக் கூட்டுமாறு ரணில் அவசர வேண்டுகோள்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 15 23:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 23:20
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முழு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவைகள் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவொரு நிலையில், இரவு நேர ஊரடங்குச் சட்டம் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதேவேளை, கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபயவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
கொவிட் தொற்றுத் தொடர்பாக தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாதெனவும், ஆகவே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தி அவசர நிலமைகள் குறித்து ஆராய வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இந்த மாநாட்டின் மூலம் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்த முடியுமெனவும், கட்சிகளின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று அனைவரின் பங்கேற்புடன் தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டுமெனவும் உரிய தரப்புடன் கட்சி அரசியல் வேறுபாடுகளின்றி செயற்பட வேண்டுமெனவும் மக்களைப் பாதுகாப்பது மாத்திரமே உடனடித் தேவையெனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.