இந்தப் பேரணியில் கலந்துகொண்ட அனைத்துக் கிராம மக்களும் பாப்பாமோட்டை, ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கள்ளு விற்பனை நிலையங்களை மூடுமாறு உரக்கக் கோஷம் எழுப்பினர்.
போத்தல்களில் விற்பனை செய்யப்படும் கள்ளுகளில் போதைப் பொருட்கள் கலக்கப்படுவதாகவும் அந்த வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும் என்பதையே கிராம மக்கள் வற்புறுத்தி வருவதாகவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இலங்கைப் பொலிஸார் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய மறுப்பதாகவும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுமார் இரண்டு மணிநேரமாக இடம்பெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கனக்காக மக்கள், கலந்துகொண்டு எதிர்ப்பை வெளியிட்டனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், தமிழர் தாயகப் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் பண்பாடுகளை சீரழிக்கும் செய்பாடுகளை சில சக்திகள் உருவாக்கி வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளு விற்பனை நிலையங்களை மூடுமாறு கிராம மக்கள் பலதடவை இலங்கைப் பொலிஸாருக்கு முறையிட்டபோதும், பொலிஸார் கவனம் எடுப்பதில்லை. பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.
கொழும்பு அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய அரசியல் பிரதிநிதிகள் சிலரும் இதற்கு உட்ந்தையாக இருப்பதாகவும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.
பேரணியின் முடிவில் மாந்தை மேற்கு பிரதேச செயலக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.