அதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும், மருந்து விற்பனை நிலையங்கள் இயங்குமெனவும், அத்தியாவசிய உணவு விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் போன்ற நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க முடியுமென்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, கொவிட் தொற்று நீடித்தால் எதிர்காலத்தில் இலங்கைத்தீவு முழுவதையும் முடக்க நேரிடுமெனவும், ஆனால் மக்கள் சில தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
இன்றிரவு இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றினார். இதன்போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள ஜனாதிபதி, சாதாரண தொழிலாளர்களும் பொது மக்களும் பாதிக்கப்படாமல் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்ததாகவும் கூறினார்.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுக்க இது உரிய நேரம் அல்ல எனவும் பொறுமையோடு செயற்படுமாறும் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய, நோய்த் தொற்றுக்கு மத்தியில் போராட்டங்களை நடத்தி இலங்கையைச் சிக்கலுக்குள் தள்ள வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார்.