இந்த நிலையில் அடம்பன் வைத்தியசாலையில் குறித்த மூன்று சிறுமிகளுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சிறுமிகள் மூவரும் கொவிட் -19 நோய் தொற்றினால் பீடிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியர் நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
இதையடுத்து திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்திற்கு சனிக்கிழமை பிற்பகல் விஷேட மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட்டு குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள மிகுதியான 51 சிறுமிகளுக்கும் குறித்த சிறுவர் இல்லத்தில் மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றும் இரண்டு பெண்களுக்கும் துரித அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டவேளை, அங்கு மேலும் 22 சிறுமிகளும் 2 பெண் மேற்பார்வையாளர்களும் கொவிட் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக வைத்திய நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தின் 25 சிறுமிகளும் அங்கு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றிய இரண்டு பெண்களும் நேற்று சனிக்கிழமை மாலை 7.30 க்கு மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்திற்கு மேலதிக பராமரிப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் விஷேட சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் கசுன் ஜெயசுந்தர தலைமையிலான விஷேட மருத்துவக் குழுவினர் தாராபுரம் துருக்கி சிட்டி கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்திற்கு சென்று கொவிட் தொற்றுக்குள்ளான சிறுமிகளை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், சிறுமிகள் அனைவரும் குறித்த மருத்துவக் குழுவினரின் நேரடிக் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சிறுவர் இல்லமொன்றில் உள்ள சிறுமிகள் அநேகர் ஒரே சமயத்தில் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளான சம்பவம் இதுவே முதன் முறை என்பதுடன் மன்னாரில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிபிடத்தக்கது.