தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு மற்றும் அங்கத்துவக் கட்சிகளின் இணக்கத்துடன் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதா என்பது குறித்து காலைக்கதிர் செய்தியில் கூறப்படவில்லை. ஆனால் மாகாண சபைத் தேர்தல்களுக்கான சட்டங்களை ஒழுங்குபடுத்துமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வேண்டுகோள் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் அல்லது பிரதமரிடம் விடுக்கப்பட்டதா அல்லது வாய்மொழிமூலம் பேசப்பட்டதா என்பது குறித்தும் செய்தியில் எதுவுமே கூறப்படவில்லை.
ஆனால் இது தொடர்பாக தனிநபர் நகல் சட்டமூலம் ஒன்றை 2019 ஆம் ஆண்டு சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதுபற்றிய விபரங்களும் காலைக்கதிர் செய்தியில் விபரமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் இல்லையேல் பழைய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமெனவும் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தன.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாண சபை முறை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்று ஏற்கனவே தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்ட்மைப்பு தெரிவித்திருந்தது.
ஆனால் 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டு ஆட்சியமைத்திருந்தது. இந்தநிலையில், மீண்டும் தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பு கோரியுள்ளது.
ஆனால் சுமந்திரன் கோரிக்கை விடுத்தமை தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக எதுவுமே கூறவில்லை.
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இலங்கைத்தீவின் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.