நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொழும்புத் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான பதின்மூன்று ஏக்கர் நிலப்பகுதியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சம்மதத்துடன் கொழும்புத் துறைமுக அதிகாரிகள் காணியைக் கையளிப்பதற்கான எற்பாடுகளை செய்துள்ளதாக அனைத்துத் துறைமுகங்களின் பொது ஊழியர் சங்கச் செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவித்தார். காணியைக் கையளிப்பது தொடர்பாக கொழும்புத் துறைமுக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு உரையாடவில்லை எனவும் அவர்களின் சம்மதம் பெறப்படவில்லையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
துறைமுகத்துக்குச் சொந்தமான காணிகளை தனியாருக்கு அல்லது வெளிநாடுகளின் தனியார் கம்பனிகளுக்குக் குத்தகைக்குக் கொடுப்பதாக இருந்தால், கொழும்புத் துறை முக ஊழியர் சங்கத்துடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமெனவும், ஆனால் அந்த விதிமுறை மீறப்பட்டுள்ளதெனவும் நிரோஷன் கொரகானகே கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.குறைந்த பட்சம் முறையான கேள்விப்பத்திரம் கோரப்பட்டு காணி விற்பனைச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வருடத்துக்கு எட்டு இலட்சம் ரூபாவீதம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இது துறைமுக அதிகார சபைக்குப் பெரும் நட்டம் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.