மன்னார் நகரின் பஸார் பகுதி மேல் நீதிமன்றம் அமைந்துள்ள பள்ளிமுனை வீதி, மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்புறமாகவுள்ள மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி மற்றும் எஸ்பிளேனட் வீதி ஆகியவற்றிலேயே இலங்கை இராணுவத்தினரால் கடந்த புதன்கிழமை தொடக்கம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதிகளினால் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் அவ்வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பொதுமக்களும் வழிமறிக்கப்பட்டு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக மேலும் கூறப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் ஏலவே மன்னார் பிரதான பாலம், மன்னார், மதவாச்சி பிரதான வீதியில் உள்ள வங்காலை முற்சந்தி, மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் மாதா கிராமம் சந்தி மற்றும் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தாராபுரம் சந்தி ஆகியவற்றில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள வீதிச் சோதனைச் சாவடிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் நகரின் பல முக்கிய வீதிகளில் கடந்த புதன்கிழமை தொடக்கம் இலங்கை இராணுவத்தினர் திடீர் சோதனைச் சாவடிகளை அமைத்து பொதுமக்களை சோதனை செய்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.