மன்னாரில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மேற்படி கிராமங்களில் வதியும் பொதுமக்கள் மழை வெள்ளம் காரணமாக தமது வீடுகளில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் மழை காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் பொதுமக்களை அருகில் உள்ள பாடசாலைகள், பொதுக்கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மன்னார் நகர சபை எல்லைக்குள் உள்ள மூர் வீதி உப்புக்குளம், சௌத்பார், எமில்நகர் மற்றும் பணங்கட்டுக்கொட்டு பகுதிகளில் சீரான வடிகால் அமைப்புகள் இல்லாததினால் மழை நீர் கடலுக்குள் செல்லமுடியாது இப்பகுதிகள் பெரும் வெள்ளக்காடாக மாறியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மன்னார் நகரில் பல பகுதிகளில் எவ்விதத் திட்டமிடலும் இல்லாது வகை தொகையின்றி கட்டிட நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதினால் நகரின் மழை நீர் வடிந்தோடும் பகுதிகள் ஊடாக நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் அடைமழை காரணமாக நானாட்டான், மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில கிராமங்களிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தலைமன்னார் கிராமத்தில் உள்ள பல வீடுகளில் நீர் உட்புகுந்து அப்பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அதிகாரிகள் இப்பகுதிக்கு வருகை தந்து இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தலைமன்னார் கிராமத்தின் பங்குத் தந்தை வண.பிதா மார்க்கஸ் அடிகளார், புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பகுதி மக்கள் மழை வெள்ளம் காரணமாக தமது வீடுகளில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் அரசாங்க அதிகாரிகள் பொது மக்களை வந்து இதுவரை பார்வையிடாதுள்ளமை கண்டிக்கத்தக்கது என தலைமன்னார் பங்குத் தந்தை ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.