வடமாகாணம் முல்லைத்தீவு
ஒதியமலை படுகொலை நினைவேந்தல்
இராணுவத்தால் 27 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவுத்தூபி முன்பாக நிகழ்வுகள்
பதிப்பு: 2021 டிச. 02 22:18
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு:
டிச. 02 22:38
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினாலும், சிங்கள காடையர்களாலும் ,அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் கருதுகின்றனர்.
குறித்த ஒதியமலைப் படுகொலையின் 37ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.தொடர்ந்து ஒதியமலைப் பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக விசேட வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
குறித்த நிகழ்வில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா-ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.