இந்த நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்களை யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர், கடந்த ஞாயிறன்று கையளித்தனர்.
இதையடுத்து யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் மேற்படி இந்திய மீனவர்களை ஊர்காவத்துறை நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கடந்த 19ஆம் திகதி ஞாயிறு பிற்பகல் ஆஜர்படுத்தினர். இவ்விதம் ஆஜர்படுத்தப்பட்ட 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
இதேவேளை கடந்த ஞாயிறு பகல் தலைமன்னார் கடற்பரப்பில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இந்தியா ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்தனர்.
பின்னர் கைதான இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படையினர் மூலமாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
கைதான மீனவர்கள் இன்று 20ஆம் திகதி திங்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து மன்னார் மாவட்ட நீதவான் பி. விஜயக்குமார் கைதான 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.