ஆனால் இந்தச் சவாலை எதிர்கொள்ள மைத்திரிபால சிறிசேன தயாராக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்களைத் திரட்டிப் போராடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவைப் பலவந்தமாகச் சிறையில் அடைக்க முற்படுவது யார் என்பது தெரியும். அரசின் முக்கிய பிரநிதிகளா அல்லது வெளியில் உள்ளவர்களா என்பதை தற்போது கூறமுடியாதெனவும் நேரம் வரும்போது வெளிப்படுத்தப்படும் என்றும் தயாசிறி ஜயசேகர கூறினார்.
மைத்திரிபால சிறிசேனவைச் சிறையில் அடைக்க வேண்டும் எனச் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பாரிய நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனாலும் அரசாங்கத்தின் அராஜகம் அதிகரித்துச் செல்வதால், தொடர்ந்து அங்கம் வகிக்க முடியாதெனவும் கட்சியின் மத்திய குழு விரைவில் முடிவெடுக்குமெனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரி- ரணில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவாரா அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதுவுமே கூறவில்லை. அவர் கைது செய்யப்படலாமென பரபரப்புத் தகவல் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புவிசார் அரசியல் மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஆகியவற்றைக் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், அமெரிக்க- இந்திய அரசுகளைக் கையாண்டு வருவதால், தென்பகுதியில் அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசாங்கம் சில திடீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.