கொழும்புக்கு வருகை தந்துள்ள
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், கூட்டமைப்பு கோட்டா சந்திப்புக்குப் பாராட்டு
புலம்பெயர் மக்களையும் சந்திக்க வேண்டுமெனவும் கோட்டாவுக்கு ஆலோசனை
பதிப்பு: 2022 மார்ச் 23 22:18
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு:
மார்ச் 23 22:38
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளதை பாராட்டியுள்ள, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட் (Victoria Nuland), புலம்பெயர்ந்துள்ள மக்களோடும் கோட்டாபய ராஜபக்ச சந்தித்து உரையாட வேண்டுமெனக் கேட்டுள்ளார். கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட், இன்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வுகள் பற்றிக் கலந்துரையாடிய இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் குறித்தும் கலந்துரையாடினார். அமெரிக்காவின் பசுமை தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சைபர் மற்றும் தகவல்தொழில் நுட்ப துறைகளில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்த நகல் வரைபு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச விளக்கிக் கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாடு குறித்தும் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட்டுக்கு விளக்கமளித்துள்ளார்.