உக்ரெய்ன் போரில் ரசியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொலைபேசியில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை உரையாடியிருந்தார்.
ரசியாவுக்கு எதிரான வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மோடியிடம் வலியுத்தியதாகவும், இந்தியா ரசியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை அல்லது கண்டிக்கவில்லை என்ற தொனியில் பொரிஸ் ஜோன்சன் மோடியுடன் உiயாடியதாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இதன் பின்னணியிலேயே பிரித்தானிய உயர்மட்டக்குழுவின் புதுடில்லிக்கான பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாகவும் த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லி மற்றும் இராஜஸ்தான் மாநிலத்துக்கான பயணம் குறித்து கடந்த ஜனவரி மாதம் முதல் பிரித்தானிய இந்தியாவுடன் பேசியிருந்தது.
ஆனால் ரசிய- உக்ரெயன் போருக்குப் பின்னரான சூழலில் ஏற்பட்டு வருகின்ற புவிசார் அரசியல் பின்னணியில், பிரித்தானியத் தூதுக்குழுவின் புதுடில்லிக்கான பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகே இந்திய ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
பிரித்தானிய சபாநாயகரின் வருகை, இந்தியாவுக்கான முதலாவது விஜயம் எனவும் இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையில் இராஜதந்திரியாக செயல்படுவதற்கான அவரது முயற்சியின் ஒரு பகுதியெனவும் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தகச் செயற்பாட்டுக்கு ஆதரவாக பிரித்தானியத் தூதுக்குழவின் பயணம் அமைந்திருக்குமெனவும் கூறப்பட்ட நிலையில் புதுடில்லிக்கான பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
உக்ரெய்னியர்கள் ஆயுதம் ஏந்தியதை பிரித்தானிய பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.