கோட்டாவுக்கு எதிரான போராட்டம்-
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம்
சபை நடவடிக்கைகள் குழப்பம்- விசாரணைக்கு கோரிக்கை
பதிப்பு: 2022 ஏப். 20 08:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு:
ஏப். 22 23:16
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
ரம்புக்கனையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுலோகங்களைக் கைகளில் ஏந்தியிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தினால் சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
ரம்புக்கனையில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது. பொலிஸார் யாருடைய உத்தரவைப் பெற்றுத் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கேள்வி எழுப்பிய எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள். உடனடியாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோசம் எழுப்பினர். இதேவேளை, இன்றும் இலங்கைத்தீவு முழுவதிலும் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம் இடம்பெற்றது. இதனால் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பெருமளவில் இயங்கவில்லை.
கொழும்பில் மிகவும் குறைந்தளவிலேயே அரச நிறுவனங்கள் செயற்பட்டன. ஊழியர்கள் பலர் சமூகமளிக்கவில்லை. போக்குவரத்துகளும் குறைவாகக் காணப்பட்டன. கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வீதிகளில் மக்கள் கோசம் எழுப்பியதைக் காண முடிந்தது.