கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம்
இலங்கைத்தீவில் நாளை பணிப் பகிஸ்கரிப்பு- கன்டி பாதயாத்தரை கொழும்பை வந்தடைகின்றது
கொழும்பு நகரில் பொலிஸார் விசேட அதிரடிப்படை குவிப்பு- இராணுவத்தினரும் ஒத்துழைப்பு
பதிப்பு: 2022 ஏப். 27 22:12
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு:
ஏப். 27 22:27
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாளை வியாழக்கிழமை இலங்கைத்தீவு முழுவதிலும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள். வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படுமென தொழிற் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கன்டியில் ஆரம்பித்த பாதயாத்திரை நாளை கொழும்பை வந்தடைகின்றது. இதற்கு ஆதரவாகவே பணி பகஸ்கரிப்புப் போராட்டமும் நாளை நடைபெறவுள்ளது.
இந்தப் பாதயாத்திரை கொழும்பு நகரையடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. பெரும்திரளான மக்கள் கலந்துகொள்ளும் பாதயாத்திரையில், பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் காரணமாக கொழும்பு நகரில் இன்று புதன்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான சந்திகளில் கலகமடக்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்கள் வழிமறுத்துச் சோதனையிடப்படுகின்றன. கொழும்பில் அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.