ஈழத் தமிழர்களின் விவகாரம்- திரிபுபடுத்திய

பீரிஸின் ஜெனீவா உரைக்கு எதிராக யாழ் நகரில் போராட்ட அறிவிப்பு

சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு
பதிப்பு: 2022 ஜூன் 17 18:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 15:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஐம்பதாவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய உரைக்குக் கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சினையைத் திசை திருப்பும் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 

யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் சார்பில் முன்னாள் அதிபர் அருந்தவபாலன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பில் சட்டத்தரணி சி.ஆ.யோதிலிங்கம், குரலற்றோர் அமைப்பின் இணைப்பாளர் கோமகன், தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய இணைப்பாளர் சுப்பிரமணியம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

கட்சி அரசியல் சாராமல், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளாகவே, தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடவுள்ளதாகவும், அமைச்சர் பீரிஸ் சென்ற 13 ஆம் திகதி ஜெனீவாவில் நிகழ்திய உரை உண்மைக்கு மாறானது என்று அருந்தவபாலன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மக்கள் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பபட்டுக் கொண்டிருக்கும்போது பீரிஸூம் அரசாங்கமும் திருடர்கள் போன்று ஜெனீவாவுக்குச் சென்று, பொய்யான தகவல்களைக் கூறி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்யும் திட்டங்களை வகுத்து வருவதாகவும் அருந்தவபாலன் குற்றம் சுமத்தினார்.

செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த பின்னர் அருந்தவபாலன் போராட்டத்தின் நோக்கம் பற்றியும், தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கைகளின் விபரங்கள் வருமாறு-

1. கோரிக்கைகள்

- ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் 50 ஆம் கூட்டத்தொடரில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது. சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் அதை முற்றாக நிராகரிக்கிறோம்.

- 2021 ஜனவரி 15 ஆம் திகதியன்று அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் குடிசார் அமைப்புகளும் இணைந்து ஒற்றுமையாகக் கோரியிருந்தது போல, சிரியாவுக்கு ஏற்படுத்தப்பட்டதைப் போல முற்றிலும் சுயாதீனமான, சர்வதேச, விசாரணைப் பொறிமுறை ஒன்று நேரடியாக ஐ.நா. பொதுச்சபையின் கிளையமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.

- ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சலேற் அம்மையாரின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவதற்கு முன்னதாக அவரது அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறையை மேலும் கனதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தரமுயர்த்த வேண்டும். அதற்கேற்ற நிதி உதவியை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்.

- இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப் போக்க நிதி உதவி செய்ய முன்வரும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் தீவில், குறிப்பாக வடக்கு-கிழக்கில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைப் போக்கி, ஈழத்தமிழர் தேசத்துக்கும் தமிழ்பேசுவோர் உள்ளிட்ட எந்த ஏனைய மக்களுக்கும் எதிரான இன அழிப்போ ஒடுக்குமுறையோ தொடராத வகையில் அரசியல் உறுதிநிலையைத் தீவில் ஏற்படுத்தியே உதவியைச் செய்ய முன்வரவேண்டும். ஏற்கனவே சமாதானப் பேச்சுக்கள் குழப்பப்பட்டதற்கும், சுனாமி அனர்த்தத்தின் பின்னான மீள்கட்டுமானப் பொறிமுறை மறுக்கப்பட்டது போன்றவற்றில் இருந்து கற்ற பாடங்களோடு அரசியல் உறுதிநிலை தொடர்பான காத்திரமான நகர்வுகள் இடம்பெறவேண்டும்.

- இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களும் மாந்தத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல, எழுபது வருடங்களாக இலங்கை அரசு ஈழத்தமிழர் தேசத்துக்கு எதிராகப் புரிந்து வருகின்ற குற்றங்களுக்கெல்லாம் குற்றமாகிய இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உள்ளாக்குமாறு ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் தகுந்த ஆணை வழங்க வேண்டும்.

- இன அழிப்புத் தொடர்பான தனிநபர் குற்றவியற் பொறுப்பையும் இலங்கை அரசின் பொறுப்பையும் இன அழிப்பைத் தண்டித்துத் தடுக்கும் 1948 சாசனத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கவேண்டும்

- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கும் அப்பால், மனித உரிமை ஆணையாளரும் ஐ.நா. செயலாளர் நாயகமும் நேரடியாக இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஐ.நா. அவையின் அதியுயர் மட்டத்தில் பாரப்படுத்திக் கையாளவேண்டும்.

- தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்படவேண்டும்.

- வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பொறுப்புக்கூறல் சர்வதேச மட்டத்தில் கையாளப்படவேண்டும்.

- சிங்களப் பெரும்பான்மை ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்குக் கிழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.

- தமிழர் தாயகத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், மரபுரிமையை வரலாற்று உண்மைக்குப் புறம்பாக சிங்கள-பௌத்தமாக திரிபுபடுத்துவதை இனிமேலும் நடைபெறாத வண்ணம் நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும். முழுமையான மீள்குடியேற்றமும் காணி உரிமைகளும் தமிழ்பேசும் மக்களுக்கு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

- இலங்கையின் அரசாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிப் போராடும் தென்னிலங்கை மக்கள், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகமான வடக்கு-கிழக்கை உரிய முறையில் அங்கீகரிக்கவும், அரசியல் வேணவாவைப் புரிந்து, அங்கீகரித்து, தேசிய இனச் சிக்கலுக்கு ஏதுவான அரசியலமைப்பு மாற்றங்களையும் ஒரு சேரச் சேர்த்துக் கோரவேண்டும். தமிழ் மக்களின் நினைவுத்திற உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும். ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நீண்டகாலமாக இனப் பிரச்சனையைத் தீர்க்காததன் ஒரு பக்க விளைவே என்பதைப் புரிந்துசெயற்பட முன்வரவேண்டும்.

2. போராட்டத்தின் தேவையும் குறிக்கோளும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணைக்கு இணங்க மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சலேற் அம்மையாரின் அலுவலகம் ஓர் அலுவலகச் சாட்சியப் பொறிமுறையை 46-1 தீர்மானத்துக்கு இணங்க நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருந்தது.

கொரோணா பேரிடரின் மத்தியிலும், சாட்சியப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி உதவி முழுமையாகக் கிடைக்காத சூழலிலும் குறித்த சாட்சியப் பொறிமுறை காலதாமதாகமாகிய நிலையில் 2021 பிற்பகுதியில் இருந்து செயற்பட ஆரம்பித்திருந்தது.

முதற்கட்டமாக, ஏற்கனவே பதியப்பட்ட சாட்சியங்கள் முறைப்படி வகைப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

46-1 தீர்மானம் 2021 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட முன்னதாக, 2021 ஜனவரி 15 ஆம் திகதியன்று தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் தலைவர்களும், குடிசார் சமூகப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து நான்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அந்த நான்கு கோரிக்கைகளில் முதலாவது கோரிக்கை, ஐ.நா. பாதுகாப்புச் சபை அல்லது பொதுச்சபை பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரமளிப்பதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமும் செயற்திறனும் மிக்க சர்வதேசப் பொறுப்புக்கூறற் பொறிமுறை மூலம் இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மாந்தத்துவத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்குரிய ஆணையை புதிய தீர்மானம் ஒன்றின் ஊடாக வழங்குமாறு கோரியது.

இரண்டாவது கோரிக்கை, மனித உரிமைப் பேரவையின் தலைவர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்று வேண்டிநின்றது.

மூன்றாவது கோரிக்கை தொடர்ந்தும் தீவில் நடைபெறும் மீறல்களை கண்காணிக்கும் வகையிலும் மனித உரிமை ஆணையரின் அலுவலகத்தின் நேரடிப் பிரசன்னம் இலங்கை நாட்டில் ஏற்படுத்தப்படுவதற்கான ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொண்டது.

நான்காவது கோரிக்கை, முதலாவது கோரிக்கையைக் குறைத்திடாமல், ஒரு சாட்சியச் சேகரிப்பு பொறிமுறையை, குறிப்பாக சிரியா நாட்டில் இடம் பெற்ற குற்றங்களுக்கான சாட்சியங்களைத் திரட்டுவதற்கு அமைக்கப்பட்டதற்கு ஒப்பான ஆணையுடன், சர்வதேச, சுயாதீன விசாரணைப் பொறிமுறை () ஒன்றை ஐ.நா. பொதுச் சபையின் கிளையமைப்பாக மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வருட காலத்திற்கு உரியதாக உருவாக்குமாறு கோரியிருந்தது.

இந்த நான்காவது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாமல், அரை குறையாக, பொதுச்சபைக்கு நேரடியான கிளையமைப்பாக அன்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துக்கு உட்பட்ட ஒரு அலுவலகப் பொறிமுறையாக 46-1 தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாட்சியம் திரட்டும் பொறிமுறை 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இயங்க ஆரம்பித்தது.

இந்தப் பொறிமுறை, உலகில் எங்கு இலங்கை தொடர்பான விசாரணை நடைபெற்றாலும் அதற்குரிய சாட்சியங்களைக் குறித்த நீதிமன்றுகளுக்கு வழங்கத் தக்க முறையில் அவற்றைத் தொகுத்து வழங்கும் ஆணையைக் கொண்டிருக்கிறது.

இந்தப் பொறிமுறையை நீக்கிவிடவேண்டும் என்று இலங்கை அரசு கடுமையாக வாதிட்டுவருகிறது.

அதாவது, எந்த ஒரு விசாரணையும் இலங்கைக்கு வெளியில் இடம்பெறக்கூடாது. அதற்கான சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறை ஒன்று இலங்கைக்கு வெளியில் இயங்கக் கூடாது என இலங்கை அரசு முரண்டுபிடிக்கிறது.

ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இது தேவையற்ற செலவு என்றும், இவ்வாறான பொறிமுறை ஒன்று வெளியில் இயங்குவது இலங்கையில் உள்ளார்ந்த ரீதியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்குக் குந்தகமாக இருக்கும் என்றும், ஏற்கனவே ஏதோ உருப்படியான முன்னேற்றங்கள் உள்ளகப் பொறிமுறைகளால் ஏற்பட்டிருப்பதாலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையோடு இலங்கை அரசு நன்று ஒத்துழைத்து வருவதாலும், மேற்படி மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தில் இயங்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டு, பல விடயங்களில் அர்த்தமுள்ள மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உண்மைக்குப் புறம்பான தவறான சித்தரிப்பை முன்வைத்துள்ளார்.

இந்தச் சித்தரிப்புகள் அனைத்தையும் அலுவலக விசாரணைப் பொறிமுறையை நீக்கிவிடவேண்டும் என்ற நோக்கத்திற்காகக் கட்டமைத்துள்ளார்.

அடிப்படையில், அவர் முன்வைத்துள்ள தகவல்களும், புள்ளி விபரங்களும் உண்மைக்குப் புறம்பாகக் கட்டமைக்கப்பட்டவை. அவற்றை முன்வைத்துள்ளமைக்குரிய நோக்கம் முற்றிலும் தவறானது.