இதனால் ஏற்பட்ட மோதல்களையடுத்தே இன்று வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை நோக்கி வந்த மாணவர்கள் இன்றிரவு கோட்டைப் பிரதேசத்தில் தங்கி நாளை சனிக்கிழமை முழுநாளும் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர்.
ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அதனையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள், பௌத்த குருமார் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கோட்டைப் பிரதேச வீதிகளில் தங்கியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
பொலிஸார் அவர்களைக் கலைக்க முற்பட்டபோதும் மாணவர்கள் நள்ளிரவு வரையும் அங்கு தங்கியுள்ளனர். இதேவேளை கோட்டை விகாரைக்கு முன்பாக பௌத்த குருமார் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டமும் நள்ளிரவு வரை தொடர்ந்தும் நடைபெறுகின்றது.
வெள்ளிக்கிழமை காலை முதல் கொழும்பு நகரும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில் பிற்பகல் ஆரம்பித்த மாணவர்களின் பேரணியைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்கள் நடவடிக்கைகள் பதற்றத்தை எற்படுத்தியுள்ளன.
கொழும்பு நகரில் முப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கைப் பொலிஸாருக்குரிய சட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு சட்டவிரோதமானது மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் செயலாளர் இசுறு பாலபட்ட பென்டி ஆகிய இருவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.