ஜப்பானும் சீனாவுமே இலங்கைக்கு அதிகளவு கடன் வழங்கிய நாடுகள். தற்போது கடனில் பத்துவீதத்தை இலங்கை சீனாவிற்குச் செலுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருபத்து இரண்டு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கை, தற்போது அந்நியச் செலாவணியை முற்றாக இழந்துள்ள நிலையில், பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், பாலித கோகண பீஜிங்கில் வைத்து ரொய்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரித்துள்ளார்.
நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள வேறு பல நாடுகளிற்குச் சீனா உதவவேண்டிய நிலையில் இருந்ததாலேயே, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது சீனா உடனடியாக நிதியுதவி வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.
இலங்கை மாத்திரம் பாதிக்கப்பட்டிருந்தால், சீனா விரைவாகத் தீர்மானம் எடுத்து இலங்கைக்கு நிதியுதவி வழங்கியிருக்கும் என்றும் பாலித கோகண தெரிவித்தார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீனாவின் பங்களிப்பு முக்கியமானது. இலங்கைக்கு அதிகளவு கடன்வழங்கிய நாடு சீனா என்ற தொனியிலும் பாலித கோகண விபரித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள பாரிய சீனா ஆதரவுடனான துறைமுக திட்டங்களில் சீனா மேலும் முதலீடு செய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் புதியவர் அல்ல. 2016 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஆகவே புதிய அரசாங்கத்தின் சீனா தொடர்பான கொள்கையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என பாலிதகோகண தெரிவித்தார்.
இலங்கைக்குக் அதிகளவு வருமானம் ஈட்டித்தரும் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதித் தொழிற்துறைக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்குச் சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் கடனுதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கான பேச்சுக்கள் தொடருவதாகவும் பாலித கோணன மேலும் தெரிவித்தார்.