கண்டியில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணிகள் பற்றி அசேல தர்மசிறி விளக்கமளித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈழத்தை வென்றெடுப்பதற்காக அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்ட சில அருட் தந்தைகளைக் காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் காணக்கூடியதாக இருந்ததென்றும் அதற்கு ஆதாரமாகப் படங்கள் இருப்பதாகவும் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார்.
இச் செயற்பாடுகளினாலேயே கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல நேரிட்டதாகவும், புலம்பெயர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த காலிமுகத்திடல் போராட்டத்தில் பௌத்த குருமார் சிலர் பங்குபற்றியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
போராட்டத்தினால் இலங்கையை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டு சென்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும். முப்பத்து இரண்டு ஆண்டுகள் இடம்பெற்ற போராட்டத்தில் இருபத்து ஏழாயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளதாகவும், அறுபத்து நான்காயிரத்து ஐநூறு படையினரில் பதின் நான்காயிரத்து ஐநூறு பேர் வாழ் நாள் முழுவதும் அங்கவீனமாகியுள்ளதாகவும் அசேல தர்மசிறி தெரிவித்தார்.
இலங்கைப் படையினர் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கப் போராடவில்லை. ஆனால் இன்று பல சிங்கள இளைஞர்கள் ஈழத்துக்காகப் போராடுகிறார்கள். புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் குற்றம் சுமத்திய அவர், ஜனாதிபதிப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவையும் துரத்திவிட்டு, யாரை ஜனாதிபதியாகப் போகிறார் சரத் பொன்சேகா எனவும் கேள்வி எழுப்பினார்.