2009 ஆம் ஆண்டுப் போரின் பின்னரான சூழலில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வழிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடித் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இறுதிப் போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நடந்தது என்ன என்று கேட்டு சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தகர்ளும் தமது கடைகளை மூடி காலை முதல் நண்பகல் 12 மணிவரை போட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.