இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்

ராஜபக்ச குடும்பத்தை ரணில் காப்பாற்றுகிறார்- சஜித் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைக்கூடக் கைவிட்டுள்ளதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2022 செப். 11 21:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 00:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயங்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் அதில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஸனப் பெரமுனக் கட்சிக்கும் உடன்பாடில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 
கொழும்பின் புறகர் பகுதியான களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தெரிவின்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் வாக்களித்ததால், அதற்கு நன்றிக் கடனாகவே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளையும் பொருட்படுத்தாமல் அதிகளவு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

போராட்டங்களின் மூலம் துரத்தப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளார். இலங்கையைப் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கவைத்த பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகின்றனர். இதுதான் ரணில் விக்கிரமசிங்கவின் ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றும் ஆட்சி என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையில் மக்கள் அபிப்பிராயம் ஒன்று புதிதாக உருவாக வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்களின் அபிப்பிராயத்துக்கு அடிபணிந்துள்ளதாகக் கூறினார்.