சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சந்தேகங்களைக் கிளப்பி வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் உள்ள கணக்காய்வுக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆயிரக்கனக்கான அரச ஊழியர்களைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை பெரும் நிதிச் சுமை எனவும் அமைச்சர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தேவையான நிதி நிவாரணங்களை பெறுவதற்கு ஏற்ற முறையில் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, கடந்த மே மாதம், நிதி ஆலோசகர்களான 'லாசார்ட்' இன் சேவைகளைப் பெறுவதற்கு இலங்கை அதிகாரிகள் தீர்மானித்ததுடன், சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனமான 'கிளிபோர்ட் சான்ஸ்' நிறுவனமும் இலங்கையில் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இலங்கையின் கடன் 85 பில்லியன் டொலரில் இருந்து சுமாா் நூறு பில்லியன் டொலர்களைக் கடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.