மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலையில் தற்போது தமிழர் பிரதேசங்களும், தமிழர் வழிபாட்டு இடங்களும் திட்டமிட்டு பௌத்த மயமாக்கப்படும் நிலையில், அங்கு செயற்றிறன் மிக்க மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணேஸ்வரர் ஆலயத்தின் காணிகளைக் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்வைத்த பிரதிநிதிகள், சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன், சம்பந்தன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து நியமிக்கப்பட்ட குழுவில் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உடலக்குறைவினால் நாடாளுமன்ற அமர்வுகளிலும் சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை வடக்குக் கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்புகள் உள்ளிட்ட அத்துமீறல் செயற்பாடுகள் பற்றி நேரடியாகச் சென்று பேசுமளவுக்கு சம்பந்தனால் முடியாதென்றும் இதனால் அவருடைய பதவிகளுக்கு வேறொருவரை நியமிக்க வேண்டுமெனவும் மத்திய குழுக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.