தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வை முன்வைக்கக்கூடிய ஏற்பாடுகள், தொடர்பாகத் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதாக ஐ.எம்.எப்.எனப்படும் சர்வதேச நாணய நிதியம் ஏலவே தெரிவித்திருந்தது.
கடன் மறு சீரமைப்புத் தொடர்பாக சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ச்சியாகப் பேச்சு நடத்தி வருகின்றது.
இலங்கைத்தீவுப் பொருளாதாரத்தை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் எதிர் கொண்டுவரும் சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கடந்த வாரம் அரசாங்கத்துக்கு விளக்கம் அளித்திருந்தார்.
கடன் பெறுவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமே செய்யப்பட்டவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன கூறியிருந்த நிலையில், கடன் திட்டங்கள் தொடர்பாக சா்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் பேச்சு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.