கொவிட் 19 நோய்த்தாக்கம் 2021 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கமே 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரிய நெருக்கடியை தோற்றுவித்தது என்றும் மாற்றுப் பொருளாதாரத் திட்டங்கள் மூலமாக சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் செய்துகொண்டதையடுத்துக் கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை மேம்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டமானது, இலங்கைத்தீவுக்கு மிகவும் தேவையான மற்றும் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.