வடக்கு- கிழக்கு தமிழர் தாயக சிவில் சமூகப் பிரதிநிதிகள். யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளும் பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
பேரணியில் கலந்துகொண்ட பலரை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் செய்தியாளர்கள் போன்று செயற்பட்டு படம் எடுத்ததாகவும் பேரணியில் கலந்து கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் கூர்மைச் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்தப் பேரணியில் கலந்துகொள்வதற்காக வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெரும்திரளான மக்கள் பேரூந்துகளில் முல்லைத்தீவுக்கு இன்று காலை சென்றிருந்தனர்.
கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருனாட்டுக்கேணி ஆகிய இடங்களில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சிங்களக் குடும்பங்கள் தங்கியுள்ளன.
அவ்வாறு தங்கியுள்ள குடும்பங்களுக்கு கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரங்கைள வழங்கியுள்ளது.
இதனைக் கண்டித்தே ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் சிதைக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், தமிழர் நிலங்களில் பலாத்காரமாகத் தங்கியுள்ள தென்னிலங்கை சிங்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
முல்லைதீவு செயலகத்தில் மகஜர் ஒன்றைக் கையளித்த ஆர்ப்பாட்டக்காராகள், அங்கிருந்து பேரணியாக முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு கண்டனக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருவதாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.