இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தப் பேரணியை ராமாஞ்ஞ மகா பீடம் ஏற்பாடு செய்திருந்தது. சிங்கள பௌத்த மக்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
பொதுபல சேனவின் செயலாளர் அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முறை தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவிடம் விசனமும் தெரிவிக்கப்பட்டது.
பௌத்த குருமார் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களைப் பொலிஸார் கைது செய்வதற்கு சில விதிமுறைகள் கையாளப்பட வேண்டும் என்றும் பௌத்த குருமார் மீதான குற்றங்களை முதலில் பௌத்த குருமார் அடங்கிய குழுவினர் விசாரனை செய்த பின்னரே விசேட நீதமன்றத்திற்கு பாரப்படுத்த முடியும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழர் தாயகத்தில் போர் நடைபெற்றகாலத்தில் ராமாஞ்ஞ மகா பீடம் உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான காலத்தில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இதுவரை 131 பௌத்த விகாரைகள் பௌத்த குருமாரினால் இலங்கை இராணுவத்தின் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஏலவே கூறியிருந்தார்.
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை மையப்படுத்தி ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என இலங்கை அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கடந்த மே மாதம் இடம்பெற்ற, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் நினைவுதின நிகழ்வில் உரையாற்றும்போது கூறியிருந்தார்.
இந்த நிலையில் பௌத்தகுருமாரை விசாரணை செய்வதற்கென தனியார் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய சமூகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பிலும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்புக்கான வரைபிலும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
1958 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் பௌத்த குருமாரே காரணம் என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.