ராஜ்குமார், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வடபகுதி இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை, ராஜ்குமார் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆகவே, அவர் விசாரனைக்கு அழைக்கப்பட்டமை தமது சங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் சங்கம் கூறியுள்ளது.
வவுனியா பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள இந்த அழைப்புக் கடிதத்தில், எதிர்வரும் ஆறாம் திகதி வியாழக்கிழமை காலை 9.30க்கு கொழும்பு அலுவலகத்தில் 2ஆம் மாடியில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரனைப் பிரிவுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.
விசாரனைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பில் காரணங்கள் எதுவுமே கூறப்படவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான கடந்த 30 ஆம் திகதி வியாழக்கிழமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றினைந்து மன்னார் நகரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு. திருகோணமலை. அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கொழும்பிலும் சிங்கள மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.