இலங்கை அரசியல் நெருக்கடியின் இரண்டாம் பாகம்

மைத்திரியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை - நாளை நாடாளுமன்றம் கூடும் என்கிறார் ரணில்

கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு- டிசம்பர் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணை
பதிப்பு: 2018 நவ. 13 19:03
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 13 21:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு இலங்கை உயர்நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மைத்திரியின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சுமார் 20 இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பான விசாரணை நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் ஆரம்பித்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இவ்வாறு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக வேறு இடையீட்டு மனுக்களை சமர்ப்பிப்பதற்கும் உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
 
எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம், ஐந்தாம், ஆறாம் திகதிகளில் மீண்டும் இடையீட்டு மனுக்கள் மற்றும் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் எனவும் உயர் நீ்திமன்றம் கூறியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரிவித்து 20இற்கும் அதிகமான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசியல் கட்சிகள் சார்பிலும் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் சிலர் சார்பிலும் இந்த 20இற்கும் அதிகமான மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

நேற்று மாலை வரை அதில் 13 மனுக்கள் விசாரணைகளுக்காக தயார் நிலையில் உயர்நீதிமன்ற பதிவாளரால் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்தன. இதில் 10 மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று இடம்பெற்றதை அடுத்து ஏனைய மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றன.

இன்று இடம்பெற்ற நீண்ட நேர விவாதத்தின் பின்னர் இந்த அறிவிப்பு நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் முதல்படி என ரணில் விக்கிரமசிங்க தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை நாளை புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும் என பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 8.30க்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் பெறும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.