நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியென அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை கூடிய இலங்கை நாடாளுமன்ற அமர்வின்போது இடம்பெற்ற வாய்மொழி மூலமான வாக்கெடுப்பின் போது இது உறுதியானது என தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.
இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை யாராவது எதிர்க்க விரும்பினால் நாளை அவர்கள் அதனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க நாங்கள் நாளையும் தோற்கடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் அஜித்பெரேரா மற்றும் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோரும் இதனை உறுதிசெய்துள்ளனர்.