சிங்கள கடும்போக்குவாதிகளிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு

அமெரிக்காவின் உதவியைக் கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஐ.நா அலுவலகத்தில் அமெரிக்கா ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு
பதிப்பு: 2018 நவ. 14 15:36
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 14 15:55
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் உள்ள சிங்கள கடும்போக்குவாதிகளிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு தாயகத்துக்கு அமெரிக்கா வர வேண்டும் என தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையின்போதும் அதற்குப் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் கடந்த 1 வருடத்துக்கும் மேலாக கண்டனப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
 
இதன் ஒரு கட்டமாக 2009 ஆம் ஆண்டு இன அழிப்பு போரின் இறுதி நாட்களிலும் அதன் பின்னர் இலங்கை அரசின் திறந்தவெளிச் சிறைச்சாலைகளான முகாம்களிலும் வைத்து கையளிக்கப்பட்ட கடத்தப்பட்ட தமது உறவுகள் மீள தமக்கு வேண்டும் என வலியுறுத்தி கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய முன்றலில் 631 ஆவது நாளான இன்று கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

நல்லூர் ஆலய முற்றத்தில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் அங்கிருந்து பேரணியாக சென்று யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகள் குறித்து தமக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்புக்கான மகஜரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்தில் கையளித்தனர்.

குறித்த மகஜரில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நாம் அறிவோம். தொடர்ந்து 631 ஆவது நாளாக சுழற்சிமுறையில் போராடுகின்றோம். இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையான அல்லது நியாயமான எவற்றையும் செய்யாது. எனவே உங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள 25 ஆயிரத்துக்கும் மேலானோரைக் கண்டுபிடியுங்கள், தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உதவுங்கள், தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கிலிருந்து பாலியல் பலாத்கார மற்றும் இனப்படுகொலையாளியான இலங்கை இராணுவத்தை வெளியேற்ற உதவுங்கள், இலங்கை இராணுவம் நடத்தும் பாலியல் அடிமை முகாம்களை அகற்ற உதவுங்கள் என்பன போன்ற கோரிக்கைகள் முன்வைக்ககப்பட்டுள்ளன.

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ரம்ப்பின் புகைப்படம் மற்றும் அமெரிக்காவின் தேசியக் கொடி ஆகியனவற்றை உள்ளடக்கிய பதாதைகளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாங்கியிருந்தனர்.