மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் மீண்டும் இன்று மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்துமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரிய சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மகிந்த தரப்பு உறுப்பினர்கள் பெரும் கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர். சபை நடுவாக நடந்து வந்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களோடு கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதனால் நாடாளுமன்றம் யுத்தகளமாக மாறியதாக செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் தனது ஆசனத்தில் இருந்த மகிந்த ராஜபக்ச சபாநாயகரைப் பார்த்து ஏசியவாறு எழுந்து சபையை விட்டு வெளியே சென்றார். அதனையடுத்து ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேறினார்.
அதற்கிடையே மஹிந்த தரப்பு உறுப்பினர் ஒருவர் சபாநாகயரின் ஆசனத்தில் தண்ணீரை ஊற்றியதுடன் அவரை நோக்கி காகிதங்களால் வீசினர். அதனையடுத்து சபாநாயகரும் வெளியேறிச் சென்றார். இந்த நிலையில் திகதி குறிப்பிடப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனும் அங்கிருந்து வெளியேறினார். இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் சம்பந்தன் அதற்கு பதலளிக்காது அங்கிருந்து நழுவினார்.
இதேவேளை, வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மீது மகிந்த ராஜபக்ச தனது விசேட உரையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
அரசியல் யாப்புக்கு அமைவாகவே பிரதமர் பதவியை ஏற்றுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெளிநாட்டுச் சக்தியின் உதவியோடு கொலைச் சதிபுரிந்தமையினால் பிரதமர் பதவியை ஏற்குமாறு மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் மகிந்த தனது உரையில் குறிப்பிட்டார்.
இதேவேளை நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகவியலாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.