எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மாத்திரமே கருத்துக் கூறினார். அதுவும் முக்கியமான விடயம் ஒன்று இருப்பதாகவும் ஆனாலும் அதனை தற்போது கூற முடியாதெனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்போடு இன்று இரவு இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் எவரும் கருத்துக் கூறவில்லை.
ஆனாலும் நாடாளுமன்றத்தில் அமைதியை ஏற்படுத்தும் விடயத்தில் இணக்கம் ஏற்பட்டது எனவும் பிரதமர் பதவி விவகாரம் தொடர்பாக எதுவுமே பேசப்படவில்லை எனவும் மகிந்த தரப்பு உறுப்பினர் டிலான் பெரேரா மாத்திரமே கருத்துக் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டார் என்றும் நாடாளுமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெறுவார் எனவும் மகிந்த தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், ஆதரவு தெரிவிக்கும் உறு்ப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களின் குரல் வாக்குகள் பதியப்பட வேண்டுமென மைத்ரிபால சிறிசேன இரண்டு சந்திப்புக்களிலும் கூறியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று இரவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவும் தனது ஆதரவு உறுப்பினர்களோடு இன்றிரவு கலந்துரையாடியுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற பேரணியில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
மைத்திரி - மகிந்த ஆகியோருக்கு எதிரான சுலோக அட்டைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியால் கொழும்பில் இரவு ஒன்பது மணிவரையும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.