மகிந்த தரப்பு அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதுடன் அவரைச்சுற்றி ஏனைய அனைவரும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரிய இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட போதும் மகிந்த தரப்பு உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.
கையில் கிடைத்த பொருட்கள் மற்றும் கதிரைகளால் சபாநாயகரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இனால் தனது ஆசனத்தை நெருங்க முடியாத நிலையில் சபாநாயகர் செங்கோலுடன் வெளியேறி்ச் சென்றுள்ளதாக நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெருமளவு இலங்கைப் பொலிஸாரும் முப்படையினரும் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மகிந்த தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது மிளகாய்த் தண்ணி வீ்சியுள்ளனர். இதனால் உறுப்பினர் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகா் கரு ஜயசூரிய பொலிஸாரின் பாதுகாப்புடன் சபையின் ஓரமாக நின்று கொண்டு அறிவித்தார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி நண்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவில் நம்பிக்கை இல்லை என்பது மூன்றாவது தடவையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.
அவரால் பிரதமர் பதவி வகிக்க முடியாது. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அவ்வாறு அவர்கள் விலகாவிட்டால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாக கருதப்படுவர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் நாடாளுமன்றக் கட்டடத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறினார்.