இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவே இலங்கையின் பிரதமர் என ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியின் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களை மதிக்கவில்லை என்றும் சர்வாதிகாரமாகச் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை இரவு ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் பங்காளிக் கட்சிகளையும் மைத்திரி சந்திப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பும் இடம்பெறவில்லையென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததில் இருந்து ஆரம்பித்த அரசியல் நெருக்கடி, இன்று 21 நாளாகத் தொடருகின்றது.
இதேவேளை, நாடாளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிரான வழக்கை அரசியல் யாப்பு விவகார வழக்காக மாற்றி நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கை கட்சிகளின் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே ஐக்கியதேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தாக்கல் செய்திருந்தன.
அதனால் விசாரணையின் போது மூன்று நீதியரசர்கள் மாத்திரமே அந்த மனுக்களை விசாரணை செய்தனர். ஆகவே எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி ஆரம்பமாகவுள்ள அந்த மனுக்கள் மீதான விசாணைக்கு குறைந்தது ஏழு நீதியரசர்களை நியமிக்குமாறு வலியுறுத்தி பேராசிரியர் பிீரிஸ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்குப் பின்னரான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 4, 5, 6 ஆம் திகதிகளில் நடைபெற்று ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.