இலங்கைக்கு விசேட பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவுக்கு சென்று சிவில் சமூக அமைப்புக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பலரையும் சந்தித்து தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடியதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் தாயார் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் தற்போது இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியிடம் ஐ.நா பிரதிநிதிகளால் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்க தலைவி ஈஸ்வரி இந்த அரசாங்கம் அதிகாரத்திற்காக சண்டை பிடிப்பதாகவும் இது தெற்கின் தற்போதைய நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டியதுடன் இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது என ஆதங்கம் வெளியிட்டார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சனையில் சர்வதேசம் தலையிட்டு நியாயமான தீர்வைப் பெற்றுத்தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன் மகிந்த அரசாங்கம் வந்தால் போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாலம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஐ.நா பிரதிநிதிகளுக்கும் தமிழர் மரபுரிமை பேரவையினருக்கும் இடையில் முல்லைத்தீவு - கோவில்குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களான வி.நவநீதன், அருட்தந்தை லூயிஆம்ஸ்டோங் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகள் அரசியல் கைதிகளின் பிரச்சனை தொடர்பிலும்,பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் ஐ.நா அதிகாரிகளிடம் கூறியதாக தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட் தந்தை லூஜி ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்தார்.