நிலையான அரசியல் இல்லாமையினால் இறக்குமதியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்றும் இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுத்துவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கா கூறியுள்ளார்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது குறைவடைந்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்களும் இலங்கைக்கு வருவதை தவிர்ப்பதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகின்றது. சுற்றுலாப் பயணிகள் பலர் தமது முன்கூட்டிய பதிவுகளை இரத்துச் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா ஒழுங்கமைப்பு சங்கத்தின் தலைவர், ஹிரத் பெரேரா கூறியதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசியல் நெருக்கடியினால், கொழும்பில் ஏற்பாடாகியிருந்த சர்வதேசக் கூட்டங்கள், நிகழ்வுகள் போன்றவற்றை பல சர்வதேச நிறுவனங்கள் சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு மாற்றியுள்ளதாக இலங்கை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.
பல ஹோட்டல் முன்பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இருபது வீதமான அறைகளின் முன்பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள கோல் பேஸ் ஹோட்டல் முகாமையாளர் சந்திர மகோற்றி கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி மக்களின் வாழ்க்கைச் சுமை எவற்றையுமே கருத்தில் எடுக்காது இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் செயற்படுவதாக ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸநாயக்கா கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.