இலங்கை அரசியல் நெருக்கடி மேலும் தொடர்கின்றது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான விசாரணையின் இறுதித் தீர்ப்பு மேலும் தாமதம்

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மத்தியிலும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது
பதிப்பு: 2018 டிச. 07 19:48
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 08 10:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரும் மனு மீதான விசாரணை ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. ஆனால் இறுதித் தீர்ப்பு தற்போதைக்கு வெளிவராது என உயர் நீதிமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இன்று ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 13 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கூறியிருந்தனர். ஆனால் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின் போது நாளை சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
 
இலங்கை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரோ மற்றும் பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் இன்று நான்காவது நாளாகவும் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை உயர் நீ்திமன்றம் இரத்துச் செய்ய முடியாதென இலங்கைச் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது தரப்பு விவாதத்தின்போது கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னதாக கலைப்பதற்கான அதிகாரம் அரசியல் அமைப்பில் ஜனாதிபதிக்கு இல்லை என்று மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

இதனால் இலங்கைச் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கும் எதிர்த்தரப்புச் சட்டத்தரணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

19 ஆவது திருத்தச்சட்டம் குறித்தும் இருதரப்பும் கடுமையான வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட்டதாக நீ்திமன்றத் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் விசாரணை நடத்தி வரும் ஏழு நீதியரசர்கள் மத்தியிலும் குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட இலங்கை அரச வா்த்தமானி இதழ் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி இதழுக்கு எதிராக இருபது அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் ஆதரவாக, ஐந்து மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்களை நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆராய்ந்த மூவர் அடங்கிய பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழு, டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரையும் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இதனால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நவம்பர் 14 ஆம் திகதி மீண்டும் கூடியது. இதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் அவருடைய 49 அமைச்சர்களும் தொடர்ந்து பதவி வகிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர்கள் 122 பேர் இணைந்து கடந்த 23 ஆம் திகதி தாக்கல் செய்த ரிட் மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்து இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தனர்.

இந்த மனு மீதான இறுதி விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.