அரசியல் நெருக்கடியினால் ஸ்தம்பிதமடைந்துள்ள இலங்கை
நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் மக்கள் போராட்டம்
சிறிசேனவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளவிய ரீதியில் போராட்டங்கள்
பதிப்பு: 2018 டிச. 10 12:29
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு:
டிச. 10 12:32
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீர்மானத்திற்கு அமைய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீர்வின்றித் தொடர்ந்து செல்லும் நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் ஹட்டனில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் இளைஞர் அமைப்புகளின் ஏற்பாட்டில், இன்று முற்பகல் 11 மணியளவில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பேன் என கடந்த 2015 ஆம் ஆண்டு சபதமெடுத்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த உறுதிமொழியை மீறி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் செயற்படுகின்றார், மக்களுக்கு தேவை அரசியல் யாப்பா அல்லது அரசியல் ஆப்பா?, ஹிட்லர் ஆட்சி எமக்கு வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டோர், கோசம் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக மலையக செய்தியாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக, போராட்டத்தை ஒழுங்குசெய்திருந்த மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் இளைஞர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.