கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லையென முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் எடுக்கவில்லையென மக்கள் விசனம்
பதிப்பு: 2018 டிச. 25 23:50
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 26 10:04
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கிராமங்களில் வாழும் மக்களுக்கு இதுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தி.கோணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1963ஆம் ஆண்டு 25 குடும்பங்களுடன் கிராம அபிவிருத்திச் சங்கம் பதிவு செய்யப்பட்ட தமிழ் கிராமங்களில் ஒன்று ஆலங்குளம் எனத் தெரிவிக்கும் கோணேசன் இன்று வரைக்கும் 287 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கூறினார்.
 
மிகவும் பழமையான தமிழ் கிராமங்களில் குடியிருக்கும் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் போர் முடிவடைந்த பின்னர் மீள்குடியேறிய சகோதர இனத்தவர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

காணி உறுதிப்பத்திரம் இல்லாமையினால் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித் திட்டம் எதனையும் பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என இலங்கை அரச அதிகாரிகளினால் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கோணேசன் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

ஒரு ஏக்கர் வயல்காணிக்கு மேலதிகமாக வைத்திருப்பவர்களிடம் சுவீகரிப்பு நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், மக்கள் குடியிருக்கும் காணிகளுக்கு உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக வாகரை பிரதேச செயலாளரிடம் பலதடவைகள் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அதற்கும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை என்றார்.

இதேவேளை, தமிழ் மக்களின் பாரம்பரியக் கிராமங்களான கறுவாச்சோலை, கெவிளியாமடு, புளுக்குணாவ, கச்சக்கொடிசுவாமிமலை போன்ற கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் அங்கு சிங்களவர்கள் குடியேறி வருவதாக ஏலவே முறைப்பாடுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.