மன்னார் மாவட்டத்தில் உள்ள

மடுமாதா தேவாலயம் புனித பிரதேசம் - ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கை - கத்தோலிக்க ஒன்றியம் எதிர்ப்பு

உடனடியாக நிறுத்தி தீர்க்கமான கலந்துரையாடலை நடத்துமாறு கோரிக்கை
பதிப்பு: 2018 டிச. 14 12:28
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 14 15:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும், ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்க்கமான முடிவை மக்களுக்கும், மன்னார் மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் மன்னாரில் உள்ள மடுமாதா தேவாலயம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மடு அன்னையின் தேவாலயத்திற்கு இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக இன, மத, மொழிக்கு அப்பால் அன்னையின் அருளையும் ஆசியையும் பெறுவதற்காக வந்து செல்லுகின்றனர்.

மடு தேவாலய பிரதேசமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் ஆலயத்தின் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். அவ்வேளையில் எறிகணை வீச்சினால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதுடன் ஆலயம் சேதமாக்கப்பட்டதை உலகமறியும். 2020 ஆம் ஆண்டிற்குள் மடுமாதா தேவாலயத்தின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு இலங்கை ஜனாதிபதியினால் மடு தேவாலய பிரதேசத்தினை புனித பூமியாக மாற்றுதல் தொடர்பாக அவரது கடிதத்தின் பிரகாரம் பாவனையில் உள்ள அனைத்து காணிகளையும் அபிவிருத்தி செய்வதற்காக உரிய அமைச்சின் ஊடாக இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இக் குழுவில் உள்ளடங்கியவர்களின் விபரம் தொடர்பாக ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தினை மன்னார் மறை மாவட்ட ஆயரும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வண பிதா அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த சட்டத்தரணியுமான றியன்சி அரச குணரட்னவும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான அன்ரன் புனிதநாயகமும் இணைந்து கலந்துரையாடியதன் பிரகாரம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடிதத்தில் முக்கியமாக 2 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்ட குழுவில் மடு தேவாலயத்தின் பரிபாலகர் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும், மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆண்டகையும் இக்குழுவில் உள்வாங்கப்படுவதோடு மடு தேவாலய பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படும் எந்த விதமான அபிவிருத்தி திட்டங்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையின் பரிசீலனையுடனும், அனுமதியுடனும் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும், இந்த இரண்டு விடயங்களும் புதிதாகப் பிரசுரிக்கப்படும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுடன் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யாத்திரை ஸ்தலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான சரத்துகள் உள்ளடங்கியதாக புதிய வர்த்தமானி அறிவித்தல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஆகும்.

இந்நிலையில் ஆயர் ஆண்டகையின் கடிதத்திற்கு எந்த விதமான பதிலும் ஜனாதிபதி செயலகத்தினால் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. தற்போது 302 ஏக்கர் காணியை மட்டும் புனித பூமியாக பிரகடனப்படுத்தி வெளியிடப்படவிருக்கும் வர்த்தமானி அறிவித்தலின் மாதிரி வரைபு ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வரைபின் படி தற்போது மடு தேவாலயத்திற்கு உரிய ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணியை புனித பூமி என்ற போர்வையில் 302 ஏக்கருக்குள் மட்டுப்படுத்தப்படும் ஒரு செயலாக கத்தோலிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் 16.12.2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கின்ற தேசிய நத்தார் தின விழாவில் இது தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பாக அனைத்து மக்கள் சார்பான அதிருப்தி, ஆட்சேபனையினை தொடர்பில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ப.அன்ரன் புனிதநாயகம் 09.12.2018 அன்று ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த சட்டத்தரணியுமான றியன்சி அரச குணரட்ன மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் 16.12.2018 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை ஜனாதிபதிக்கு 09.12.2018 அன்று தொலைநகல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

எனவே ஐனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும், ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியானதொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நிற்கின்றோம் என குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.