இதனால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெளியான உயர் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசனைகள் இன்றி ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சார்பில் எவரும் கருத்து வெளியிட முடியாதென கட்சியின் ஊடகப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி மகிந்த தரப்புடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கருத்துக்களை வெளியிட முடியாது எனவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகள் இன்றி உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்துக் கூற வேண்டாம் என மகிந்த சமரசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலப் பயணம் தொடர்பாக கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது கட்சித் தலைமையோ தான் தீர்மானிக்க வேண்டுமென்றும் வேறு எந்த உறுப்பினர்களும் கருத்துக் கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் மகிந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மைத்திரி தiலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து செயற்படுவது தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச உரையாடியுள்ளார். இதேவேளை, மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா, மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் உரையாடியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்திற்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பு உயர்நீதிமன்றத்தில் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், அந்த மேன்முறையீட்டை நிராகரித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.