இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு மஹிந்த ராஜபக்ச நாளை சனிக்கிழமை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இல்ங்கை மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது இராஜினாமா தொடர்பில் மகிந்த அறிவிப்பார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, அவருக்கு மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தமது ருவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்தவின் இராஜினாமாவை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ராஜித சோனரட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பித்த அரசியல் நெருக்கடி நிலையில் 49 நாட்களின் பின்னர் நீதிமன்றத் தீர்ப்புக்களை அடுத்து நேற்று வியாழக்கிழமை மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ச உட்பட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இனியாவது சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாமாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.