இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு மஹிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை பிரதமர் பதவியில் இருந்து விலகுவாரென அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றுத் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததுடன் இலங்கை மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது பதவி விலகுவது குறித்து மகிந்த அறிவிப்பார் எனவும் கூறியிருந்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பித்த அரசியல் நெருக்கடி 50 நாட்களின் பின்னர் நீதிமன்றத் தீர்ப்புக்களை அடுத்து இன்று முடிவுக்கு வருகின்றது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மகிந்த ராஜபக்சவின் நியமானமானது சட்டவிரோமதானது என்று அனைத்து தரப்பினராலும் நிமமனம் வழங்கப்பட்ட நாள் முதல் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோதிலும் மகிந்த தரப்பு உட்பட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துடன் சர்வாதிகாரப் போக்கிலேயே தமது ஆட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக உரிய காலப்பகுதி நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தன்னிச்சையாக பிரதமர் நியமனம் மேற்கொள்ளப்பட்டு அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு நாடு ஸ்தம்பிதமடைந்த நிலையே கடந்த 50 நாட்களாக நீடித்து வந்தது.
அது மாத்திரமன்றி மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் காடையர்கள் போன்று செயற்பட்டது மாத்திரமன்றி சபாநாயகரை இலக்கு வைத்து தாக்குதலும் நடத்தினர். இதன் காரணமாக இலங்கையின் ஜனநாயகம் குறித்து சர்வதே நாடுகள் கேள்வி எழுப்பியிருந்தன.
பல தடவைகள் நாடாளுமன்றத்தில் மகிந்த மீதான நம்பிக்கையில்லா பிரேணை மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்ற போதும் நீதிமன்றத்தை நாடியிருந்த மகிந்த குழு தற்போது நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் மைத்திரியின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு அமைய வழங்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து 50 நாட்களின் பின்னர் இன்று விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.