அமெரிக்காவைச் சேர்ந்தவரான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர் 1948 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்து, கடந்த 70 வருடங்களாக மட்டக்களப்பில் மனிதாபிமான, சமூகப்பணி மற்றும் கல்விப்பணிகளை ஆற்றிவந்தார்.
இலங்கைக்கு வந்த அருட்தந்தை ஹரி மில்லர் ஆங்கில மொழிமூலம் புனித மிக்கேல் கல்லூரியில் வரலாறும் பௌதீகமும் கற்பிப்பதில் தனது பணியை ஆரம்பித்தார்.
சமாதான சகவாழ்வு வேலைத் திட்டத்துக்குப் பாரிய பங்களிப்புச் செய்த அருட்தந்தை பென்சமின் ஹென்ரி மில்லர், மட்டக்களப்பில் 1980களில் றொட்டறிக் கழகம், சமாதானக் குழு, பல்சமய ஒன்றியம், மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றை நிறுவுவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்.
1990 யுத்த காலத்தில் இலங்கைப் படைகளிடமிருந்து பொது மக்களை மீட்பதற்குப் மிகவும் உதவியாக இருந்ததோடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களைப் பகிரங்கமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கையின் மனித உரிமைகள் பற்றி வெளிநாட்டு இராஜதந்திரிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவதற்காக யுத்தகால அவலங்களை அருட்தந்தை வெளிப்படுத்தியிருந்தார்.
2002 முதல் 2004 ஆம் ஆண்டுகளில் நோர்வே அரசு செய்து கொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்த கண்காணிப்புக் குழுவிற்கும் அருட்தந்தை மில்லரை அரசு நியமித்தது.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் வளர்ச்சிக்காக அதன் பொறுப்பாளராகவும் மற்றும் ஆசிரியராகவும் கடமையாற்றியதுடன், அதிபராக 15 வருடங்கள் இவர் கடமையாற்றியுள்ளார்.
மட்டக்களப்பில் சர்வமத அமைப்பு மற்றும் சமாதான பேரவை உட்பட பல்வேறு சமூக சிவில் அமைப்புக்கள் என்பவற்றில் முக்கியஸ்தராக இருந்து, யுத்த காலத்தில் சிறந்த மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.