புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்டபோது சந்தேகநபர் தப்பியோடிய நிலையில் அவர் கொண்டுசென்ற பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்து அப்பகுதி முழுவதும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் நடமாடுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.
இதன்போது நேற்று இரவு 10 மணியளவில் அங்கு வந்த ஒருவரை மறித்து சோதனையிட முற்பட்டபோது குறித்த நபர் தான் கொண்டு வந்த பையை வீசிவிட்டு காட்டுக்குள் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பையில் இருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது குறித்த பையை வீசிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைத் தேடியறியும் நோக்கிலும் காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புதூர் முதல் கனகராயன்குளம் வரையான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியும் நாடப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருவது மீண்டும் ஒரு போர்க்காலம் போன்று காட்சியளிப்பதாகவும் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் புதூர் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கூர்மை இணையத்திற்கு கருத்து தெரிவித்தார்.