நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருடமொன்றுக்கான வரவு செலவுத் திட்டம் அதற்கு முன்னைய ஆண்டின் இறுதிக் காலாண்டில் முன்வைக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் இடம்பெற்று பின்னர் நிறைவேற்றப்பட்டு புதிய ஆண்டுக்கான செயற்பாடுகள் இலங்கை நிதியமைச்சின் ஊடாக நடைபெறுவது வழமை. ஆயினும் இலங்கை ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி காரணமாக வரவு செலவுத்திட்டம் உட்பட 2019 ஆம் ஆண்டுக்கான தீர்மானங்கள் எவையும் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் முழுமையாக எடுக்கப்படாது அரசியல் அதிகாரத்துக்கான பதவி மோகத்தினால் அரசியல்வாதிகள் முட்டிமோதிய சம்பவமே கடந்த வருட இறுதியில் நடைபெற்றது.
இவ்வாறான நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை-மையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் செய்தியாளர் குறிப்பிட்டார்.இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டம் இம்மாதம் 7 ஆம் திகதி நிதியமைச்சரினால் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.